நெஞ்சங்களை யெல்லாம் அள்ளிக்கொண்டு,
நீர்மஞ்சத்தில் நித்திரை செய்வீராக!
அனந்தசரசை 48 நாள் கடைந்ததற்கே
நாடு தாங்கவில்லையே.
பாற்கடலை மீண்டும் கடைந்தால் ?
குளத்தை கடைந்ததால் நீ வெளிவந்தாய்
குளம் கடையப்பட்ட அதே நேரத்தில்
மனித மனங்களும் கடையப்பட்டு
ஆழத்தில் இருந்த பக்தியும் வெளிப்பட்டது
வேரறுப்பேன் என்று வெறுத்ததவனும் வந்தான்.
கோட்பாடில்லா கொடியவரும் வந்தனர்.
பேட்டை தாதாவும் வந்தான்.
தள்ளாடும் தாத்தாவும் வந்தார்.
கலைத்துறையும் வந்தது.
ரகளைதுறையும் வந்தது.
சுக ஜனனமும் உன் சந்நிதியில் நிகழ்ந்தது.
மரணமும் உன் எல்லையில் நடந்தது.
முதல் தீர்த்தகாரரும், டாஸ்மாக் தீர்ததக்காரரும்
ஒரே வரிசையில் நின்றனர்.
அத்தி அத்தி என்று உலகம் முழுவதும்
இத்திக்கில் திரும்பி நோக்க வைத்துவிட்டு
கண்வளர இதோ புறப்பட்டு விட்டாய்! ,
உன்னை கண்டவர் குதூகலிக்க
காணாதவர் கலங்கி நிற்கின்றனர்.
தண்ணீரின் அடியில் இருந்து நீ அன்றாடம் ்
அவர்களை நோக்க போகின்றாய்
என்பதை அறியாதவரே கலங்குவர். .
மவுரியம, குப்தம், சதவாகனம், பல்லவம், வாதாபி,சோழம், பாண்டியம், சேரம், சாளுக்கியம், கங்கம், ஹோயசலம், முகலாயம், கோல்கொண்டா, விஜயநகரம், ஆங்கில பேரரசு என்று ஆயர்பாடி காலம் முதல் எடப்பாடி காலம் வரை அனைத்தையும் பார்த்து விட்டாய் ,
மாற்றங்கள் அனைத்தையும் சந்தித்து விட்டு, இன்று காஷ்மீர் மாற்றத்தையும் செய்து விட்டு, மீண்டும் நீரடியில் சென்று புதுகணக்கை துவக்க போகிறாய்
சென்று வா அத்திவரதா !
பிழைத்து கிடக்க மாட்டேன்
என்பது தெரிந்திருந்தும்
சம்பிரதாய வார்த்தையை கூறுகிறேன்.
பிழைத்து கிடந்தால்
2059-னில் சந்திப்போம்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *