தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தெற்கு ரயில்வே அறிவிக்கவுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6-ம் தேதி வருகிறது. இந்த பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் புறப்பட்டு செல்வார்கள்.

வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டன. தீபாவளி பண்டிகையின்போது, சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஆண்டுதோறும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ஆனால், வரும் தீபாவளி பண்டிகையையொட்டி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்குவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘வழக்கமாக தீபாவளி பண்டிகையின்போது, சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ஆண்டிலும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கவுள்ளோம். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்’’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *