சென்னையில் வரும் 11ஆம் தேதி பார்வையற்ற ஆசிரியர்கள் பேரணி ஒன்றை நடத்தபோவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான பயணப்படி உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்பட உள்ளதாக பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்.ரவீந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியபோது, ‘தமிழகத்தில் 2000க்கும் மேற்பட்ட பார்வையற்ற ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றி வருவதாகவும், இவர்களுக்கு போக்குவரத்து பயணப்படியாக மாதம் ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்டு வருவதோடு விடுமுறை நாள்களுக்கு பயணப்படி பிடித்தம் செய்யப்பவதாகவும் கூறினார்.

இதனால் பார்வையற்ற ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாவதால் தமிழக அரசு இதைக் கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பார்வையற்ற ஆசிரியர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னையில் எழும்பூரில் இருந்து பேரணி புறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பேரணியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பார்வையற்ற ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளளதாக எல்.ரவீந்திரன் தெரிவித்தார். இந்த பேட்டியின்போது பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார், பொருளாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.