தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வரும் ஜூன் மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மண்டல வைப்பு நிதி ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மண்டல அலுவலகத்தில் வருங்கால வைப்பு நிதி (பி எஃப்) குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் வைப்பு நிதி உள்ள சந்தாதாரர்களின் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, இந்த மாதத்தின் குறைதீர்க்கும் கூட்டம் வரும் ஜூன் 10ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சந்தாதாரர்கள் நீண்ட நாள் தீர்க்கப்படாத குறைகளை விண்ணப்ப உரையின் மேல், வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டத்தின் கீழ் விண்ணப்பம் என குறிப்பிட்டு, உரிய குறிப்பை எழுதி, மண்டல வைப்பு நிதி ஆணையாளர், மண்டல அலுவலகம், எண் 3, ராஜாஜி சாலை, மேற்கு தாம்பரம், சென்னை – 45 என்ற முகவரிக்கு அனுப்பவும் அல்லது தாம்பரம் மண்டல அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அலுவலரிடம் நேரில் சென்று தங்களது பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary : Employee’ Provident Fund Meeting will be conducted on June 10th in Tambaram.