கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் தமிழகத்துக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தமிழக எல்லையான ஒகேனக்கல்லுக்கு சீறிபாய்ந்து வரும் வெள்ளத்தால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குடகு, சாம்ராஜ் நகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கேரளத்தின் வயநாடு, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 1. 50 லட்சம் கனஅடியும் நீர் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 1.18 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

பின்னர் மதியம் 3 மணியளவில் நீர்வரத்து அதிகரித்து நொடிக்கு 1.40 லட்சம் கனஅடியாகவும், மாலை 6 மணியளவில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து நொடிக்கு 2 லட்சம் கனஅடியாக வேகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *