கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்றும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வால்பாறையில் ஒரே நாளில் 31 செ.மீ. மழை பெய்துள்ளது.

கர்நாடகா, கேரளா, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள் ளது. அதிகனமழையால் கேரளாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

கர்நாடகா, கேரளா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் மற்ற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 31 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 17 செமீ, தேனி மாவட்டம் பெரியார், நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 12 செமீ, கூடலூர் சந்தையில் 11 செமீ, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 9 செமீ, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 7 செமீ, நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *