சென்னை மற்றும் புறநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை இரவு வரை கொட்டி தீர்த்தது.

நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டிய நிலையில், பொதுமக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேற்றிரவு பெய்த கனமழையால் நகரின் முக்கிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அலுவலகத்தில் இருந்து கிளம்பிய பொதுமக்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பவே தாமதமானது. சோழிங்கநல்லூர்-தாம்பரம் சாலை, துரைப்பாக்கம் சாலை, தாம்பரம்-மதுரவாயல் சாலை போன்றவற்றில் மழைநீர் தேங்கியதால் ஏற்பட்ட நெரிசலால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

சென்னையில் இருந்து,

  • காலை 11.20 மணிக்கு சேலம் புறப்பட வேண்டிய விமானம் ரத்து.
  • பிற்பகல் 2 மணிக்கு ஆந்திர மாநிலம் கர்னூல் செல்லும் இண்டிகோ விமானம் ரத்து.
  • இன்று காலை 10.15 மணிக்கு அபதாபி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* இன்று அதிகாலை 2 மணிக்கு இலங்கையில் இருந்த வர இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ரத்தானது.

* ஷாங்காய், சேலம், கர்னூலில் இருந்து சென்னை வர வேண்டிய விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன

தொடர் மழையால் பயணிகள் வருகை குறைந்ததால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. பயணியருக்கு விமானங்கள் தாமதம், ரத்து பற்றிய தகவல்கள் முன்னதாகவே தெரிவிக்கப்படுவதால், சிரமம் இன்றி பயணம் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *