கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தேசிய மக்கள் தொகை பதிவகத்தில் பதிவு செய்தவர்கள் தற்போது ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆதார் பதிவு ஒருங்கிணைப்பாளர் எஸ்.குணா அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒருவர் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முன்னர் தேசிய மக்கள் தொகை பதிவகத்தில் (என்.பி.ஆர்.) பதிவு செய்திருக்க வேண்டும். கடந்த 2010-ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவகத்தில் பதிவு செய்யாதவர்கள் புதிதாக என்.பி.ஆர் அலுவகத்தின் சென்று பதிவு செய்து கொள்ளலாம். புதிதாக பதிவு செய்யப்பட்டவர்களுக்கு அவர்களுடைய செல்போனுக்கு தகவல் இதுவரை அனுப்பப்பட்டு வந்தது

ஆனால் இனிமேல் என்.பி.ஆர்-இல் புதிதாக பதிவேற்றம் செய்தவர்களுக்கு செல்போனில் தகவல் அனுப்பபடாது என்றும், கடந்த டிசம்பர் மாதம் வரை தேசிய மக்கள் தொகை பதிவகத்தில் பதிவு செய்தவர்கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். டிசம்பர் வரை மக்கள் தொகை பதிவகத்தில் பதிவு செய்தவர்கள் ஆதார் மையங்களுக்கு நேரில் சென்று என்.பி.ஆர். பதிவு எண்ணை கண்டறிந்து ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று எஸ்.குணா தெரிவித்துள்ளார்.

சென்னையில் மட்டும் ஆதார் அட்டை பதிவுக்கு மாநகராட்சின் கீழ் 53 மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கீழ் 11 மையங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தின் கீழ் ஒரு மையம் என மொத்தம் 65 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, மற்ற நாள்களில் ஆதார்க்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

English Summary : Aadhaar card for those registered in NPR