உயர் கல்வி தொடர்பான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இனி தேசிய தேர்வு முகமை தான் (என்.டி.ஏ.) நடத்தும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தனி அதிகாரம் படைத்த அமைப்பாக என்.டி.ஏ. உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் இதுவரை நடத்தப்பட்டு வந்த ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் என்.டி.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் (ஏஐசிடிஇ) சார்பில் நடத்தப்பட்டு வந்த சிமேட்’ என்ற மேலாண்மை கல்வி நுûவுத் தேர்வு, ஜிபேட்’ என்ற மருந்தாளுநர் கல்வி நுழைவுத் தேர்வுகளும் என்.டி.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. படிப்படியாக மற்ற நுழைவுத் தேர்வுகளும் அந்த அமைப்பிடம் வழங்கப்பட்டு விடும்.

மாணவர்களின் வசதிக்காக நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழியில் நடத்தப்படுவதுடன், குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரு முறை இத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

அதுமட்டுமின்றி மாணவர்களின் போக்குவரத்து சிக்கலை கருத்தில் கொண்டு, மாவட்ட அளவில் மட்டுமின்றி, துணை -மாவட்டங்கள் அளவிலும் தேர்வு மையங்களை என்.டி.ஏ. அமைக்க உள்ளது.

இருந்தபோதும் நீட் தேர்வு மட்டும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வழங்கியுள்ள தேர்வுக்கான நடைமுறைகள், கட்டுப்பாடுகள் அடிப்படையிலேயே நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *