இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நேவால், பிவி சிந்து இருவரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனர். முதல் அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால் போராடித் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கத்துடன் ஆசிய போட்டியை நிறைவு செய்தார்.

இதையடுத்து நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிவி சிந்து, ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய பிவி சிந்து, முதல் செட்டை 21-17 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுத்த அகானே யமகுச்சி 2வது செட்டை வசமாக்கினார்.

அதன்பின்னர் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. கடும் சவாலுக்கு மத்தியிலும் முன்னேறிய பிவி சிந்து, அந்த செட்டை 21-10 என கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 21-17, 15-21, 21-10 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற பிவி சிந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். வெள்ளிப் பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார்.

தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில், பிவி சிந்து, சீன வீராங்கனை தாய் டி சுயிங் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *