நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் பல நோய்களுக்கு பல வழிகளில் மருத்துவம் பார்க்கின்றனர். ஆனால் எல்லா மருத்துவங்களும் நமக்கு பூரண சுகத்தை அளிப்பதில்லை. சில மருத்துவங்கள் சுகம் கொடுத்தாலும், பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மருத்துவங்களும் உண்டு.

மூலிகை மருத்துவம்: ஆனால், மூலிகை மருந்துகளின் மூலம் மருத்துவம் மேற்கொண்டால், பரிபூரண சுகம் கிடைக்கும், ஆனால் அது மெதுவாக தான் கிடைக்கும் என்றாலும் அது நிரந்தரமான சுகமாக இருக்கும். சமீபகாலமாக பரவலாகப் பெயர் பெற்றிருக்கும் நிலவேம்பு அரிதான பல மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்ட ஓர் அபூர்வ மூலிகை ஆகும். நிலவேம்பு புதராக விளையக் கூடிய ஒரு தாவரம் ஆகும். இது ஒரு வருடத்துக்குள் அடிக்கடி பயிராகும் பூண்டு இனத்தைச் சார்ந்தது ஆகும்.

நிலவேம்பின் வகைகள்: நிலவேம்புவை சமூலமாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுவது. இது கடுமையான கசப்புடைய மூலிகை ஆகும். நிலவேம்பில் இன்னொரு வகையும் உண்டு. அது சூரத்து நிலவேம்பு அல்லது சீமை நிலவேம்பு என்று சொல்லப்பெறும். சீமை நிலவேம்புச்செடி சுமார் மூன்றடி நீளமான தண்டுப் பகுதியினை உடையது. இதன் தண்டு உருண்ட வடிவில் பழுப்பு நிறம் உடையதாயும் கிளைகள் உடையதாயும் இருக்கும்.

குணமாகும் நோய்கள்: நிலவேம்பு இலைத் தீநீர் குழந்தைகளின் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாதக் குடைச்சல், குளிர்காய்ச்சல், பித்த மயக்கம் ஆகிய துன்பங்களுக்குத் தீர்வளிப்பதாக அமையும். நாள்பட்ட சீதபேதி, காய்ச்சல், நீர்க்கோர்வை, மூட்டு வலிகள் ஆகியனவற்றை எளிதில் போக்கும் தன்மையுடையது.

விட்டுவிட்டு வந்து தொல்லை தருகிற கடுமையான வயிற்று வலி மற்றும் சிறுநீரகம் தொடர்பான வலியைக் கண்டிக்கவல்லது, குடலில் தங்கி நமக்குச் சேர வேண்டிய சத்துக்களை உறிஞ்சித் தம்மையும் தம் இனத்தையும் வளர்த்துக் கொள்ளும் ஒட்டுண்ணிகள் என்னும் கிருமிகளையும் இதை ஒத்த வேறு கிருமிகளையும் வெளியேற்ற வல்லது.

மஞ்சள் காமாலை: நிலவேம்பு மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகிறது. கல்லீரல் கெடுவதாலும் பித்த நீர், மஞ்சள் நிறமுடன் வெளியேறுதல், முறை தவறி மலம் கழித்தல், சுவையின்மை, நாக்கின் நிறம் மஞ்சளாகத் தோன்றுதல் மற்றும் நாக்கில் வெடிப்புகள் காணப்படுதல், பசியின்மை, தோலில் சுருக்கம் மற்றும் வண்ண மாற்றம், கண்கள் மஞ்சள் நிறமுடன் காணப்படுதல் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.

வயிற்று பிரச்சனைகள்: வயிற்று உப்புசம் அல்லது வயிற்று வீக்கம், தலைவலி, உடல் மந்தமாகவும், கனமாகவும் தோன்றுதல், உணவு உண்டதும் சோர்வு ஏற்படுதல், மன உளைச்சல், சிறுநீர் மஞ்சளாகவும் கலங்கலாகவும் வெளியேறுதல், தலை கிறுகிறுப்பு, காதுகளில் இரைச்சல், இடை இடையினில் தூக்கம் கலைந்து தடைபடுதல் ஆகிய தொல்லைகள் தோன்றும். இவை அத்தனைக்கும் நிலவேம்பு அணை போடும் மருந்தாகிறது.

சர்க்கரை நோய்: நிலவேம்பிலுள்ள மருத்துவ சத்துவங்கள் நுண் நோய்க்கிருமிகளை நீக்கவல்லது. கட்டிகளைக் கரைக்கும் தன்மையது. ரத்தத்தில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் குணமுடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *