தொலைத்தொடர்பு சேவையில் தனியார் நிறுவனங்களின் கவர்ச்சியான திட்டங்களுக்கு மத்தியிலும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இனி வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் (சிஎஸ்சி) செயல்படும் என பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி வட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:

வாடிக்கையாளர்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப, சென்னை அண்ணாநகர், கெல்லீஸ், அண்ணா சாலை, மாம்பலம், அடையாறு, கிண்டி, குரோம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் செயல்படும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும். இந்த நடைமுறை இம்மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்தே தொடங்குகிறது.

இந்த மாதம் 21, 28 ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும், காலை 9.30 மணி முதல் மாலை 5 வரை வேலை நேரம் ஆகும். வழக்கம்போல், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ள இந்த அறிவிப்புக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வாரத்தின் ஆறு நாட்களில் அலுவலகம் செல்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என கருதப்படுகிறது.

English Summary: BSNL Service centers will be working in Sundays too.