சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 28) முதல் ஜூலை 1-ம் தேதி வரை 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்கோனா, வால்பாறை, சின்னகல்லார், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் லட்சத்தீவு-மாலத்தீவு, கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல்45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு ஜூலை 1-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *