தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று (11.07.2023) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 80 டிகிரி முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.

நேற்று (ஜூலை 10) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூரில் 6 செ.மீ., வேலூர் மாவட்டம் அம்முண்டி, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 5 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் 14-ம் தேதி வரை மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *