சென்னையில் வீடு அல்லது அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கு, எப். எஸ். ஐ, அல்லது தள பரப்பு குறியீடு எனப்படும் கட்டட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்படுகிறது. சென்னையில், சிறப்பு கட்டடங்கள் எனும் 4 மாடிகளுக்கு மிகாத கட்டிடங்களுக்கு, எப் எஸ் ஐ. 1.5 மடங்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது மனை பரப்பை விட, ஒன்றரை மடங்கு பரப்பளவுக்கு கட்டிடங்களை அதில் கட்டலாம்.

உதாரணத்துக்கு 1000 சதுர அடி நிலத்தில் 1500 சதுர அடி பரப்புக்கு மிகாமல் கட்டடத்தைக் கட்டிக் கொள்ளலாம். இந்த எஃப். எஸ். ஐ. போதுமானதல்ல என்றும், கட்டுமான செலவை குறைக்க வேண்டுமென்றால், இதனை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வந்தது. இந்த சூழலில் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீட்டை 1 .5 லிருந்து 2 ஆக மாற்றியமைக்கப்படும் என்றும், இந்த புதிய மாற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் கூறினார்.

இன்று முதல் அமலாகும் புதிய அறிவிப்பால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.எப்.எஸ்.ஐ. இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் 1000 சதுரடி மனைப்பரப்பில் 2000 சதுர அடி பரப்புக்கு வீடுகளை கட்டலாம். புதிய நிலத்தை வாங்காமலேயே பழைய மனையில் அதிக கட்டிடங்களை கட்ட முடியும் என்பதால் நிலத்திற்கு செலவிடப்படும் பெரும் தொகை குறையும். இதன் காரணமாக குறைந்த விலைக்கு வீடுகளை கட்டுமான நிறுவனத்தினர் விற்க முடியும். எனவே இதன் பலன் நேரடியாக மக்களை சென்றடையும்.

சென்னையில் இனி வழக்கத்தை விட உயரமான கட்டடங்களை கட்ட முடியும், கட்டட அடர்த்தி கொண்ட சென்னை நகரில், நெருக்கடி குறையும் சூழல் உருவாகும். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் மூன்றரை மடங்கு வரை எப்எஸ்ஐ அளிக்கப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 5 மடங்கு வரையும், நியூயார்க் நகரில் 9 மடங்காகவும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *