ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பெருகி வரும் பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், தெற்கு ரயில்வே அவ்வப்போது சிறப்பு ரயில்களை ரயில் பயணிகளுக்காக அறிவித்து வருகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரும் சுதந்திர தின விடுமுறையை அடுத்து சென்னையில் இருந்து திருநெல்வேலி வரை வரையிலான சுவிதா சிறப்பு ரயில்கள் அடுத்த மாதம் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயில்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:

ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும். இதேபோல் நெல்லையில் இருந்து ஆகஸ்ட் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.

மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி எர்ணாகுளத்திற்கு இரவு 10.30 மணிக்கு சுவிதா சிறப்பு ரெயில் புறப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு இந்த சிறப்பு ரெயில் புறப்படும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

English Summary : Southern railway announced a special train between Chennai to Tirunelveli Suvidha express.