சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 8,013 பேரிடம் மாநகர போலீசார் ரூ8.29 கோடி அபராதம் வசூலித்துள்ளனர். விபத்து இல்லா சென்னையை உருவாக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ₹10 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மது போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாமல் ஏமாற்றி வந்த நபர்களிடம் அபராத தொகை வசூலிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி 10 கால் சென்டர்கள் அமைக்கப்பட்டு, அபராத செலுத்தாத நபர்களை செல்போனில் அழைத்து, வழக்கு தொடர்பாக நினைவூட்டி அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 1ம் தேதி அபராதம் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த நபர்களுக்கு கால் சென்டர்கள் மூலம் நினைவூட்டி 727 நபர்களிடம் ஆன்லைன் மற்றும் பல்வேறு வகைகளில் ₹75 லட்சத்து 13 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கடந்த 2 மாதங்களில் சென்னை மாநகரம் முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 8,013 நபர்களிடம் அபராதமாக ₹8 கோடியை 29 லட்சத்து 10 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *