சீனாவில் பிரபலமாக உள்ள “ஒய் பிளஸ்’ என்ற எழுதுபொருள்கள் நிறுவனம் சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களிலும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

சீன நாட்டில் “ஒய் பிளஸ்” என்ற நிறுவனம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் எழுதுபொருள்களான பென்சில், ரப்பர், “ஷார்ப்பனர்’ ஆகிய பொருள்கள் உலகம் முழுவதும் பெரும்பானோர்களால் விரும்பி வாங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது உற்பத்தி மற்றும் விற்பனையை சமீபத்தில் தொடங்கியுள்ளது.

சென்னையில் இந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவை வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அதிகாரி எம்.வி.எம். வேல்முருகன் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ‘ஒய் பிளஸ்’ நிறுவனத்தின் சீன இயக்குநர் மயிங்டா டெரி மா, இந்திய இயக்குநர் அஸ்வின் குமார் டி ஜெயின், சந்தைப்படுத்துதல் ஆலோசகர் இர்பான் சயீத் ஷேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிறுவனத்தின் 51 சதவீத பங்கு சீன நிர்வாகிகளிடமும், 49 சதவீத பங்கு இந்திய நிர்வாகிகளிடமும் இருக்கும் என்றும் நிறுவனத்திற்கு சென்னையில் தயாரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எழுதுபொருள் உற்பத்தி துறையில் சீன நிறுவனம் ஒன்று இந்தியாவில் முதலீடு செய்வது இதுவே முதல்முறை என்று நிறுவனத்தின் இந்திய இயக்குநர் அஸ்வின் குமார் டி ஜெயின் தெரிவித்தார்.

English Summary : China’s stationery company ” Y PLUS ” opened in Chennai and several places in India.