எல்.எல்.எம். (LLM) என்ற முதுநிலை சட்டப் படிப்பான கலந்தாய்வு இன்று சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தகவலை சட்டக் கல்வி இயக்குநர் நா.சு.சந்தோஷ்குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை சட்டப் படிப்பான எல்.எல்.எம். பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 2015 – 2016ஆம் கல்வியாண்டு எல்.எல்.எம். மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு சென்னை பிராட்வே பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற உள்ளது. கட் ஆப் மதிப்பெண் விவரம் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெற்ற விண்ணப்பதாரர்கள் மற்றும் குறிப்பிட்ட கட் – ஆப் மதிப்பெண் இருந்தும் அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

கலந்தாய்வு நாள் மற்றும் நேரத்தில் மாற்றம் ஏதும் கோர இயலாது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கட் ஆப் மதிப்பெண் விவரம்

ஓசி – 57.933, எஸ்சி (அருந்ததியர்) – 53.129, எஸ்சி – 52.967, எஸ்டி – அனைத்து விண்ணப்பதாரர்கள், பிசி (முஸ்லிம்) – 54.064, பிசி – 53.600, எம்பிசி, டிஎன்சி – 51.967. சிறப்பு பிரிவினர்: மாற்றுத் திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர்) – 47.628, முன்னாள் ராணுவத்தினர் வாரிசு – 52.250.

English Summary : Counselling for LLM course starts today in Dr Ambedkar law college Chennai.