வங்கக்கடலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மிக குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது வலுப்பெற்று காற்றழுத்தமாக மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

மறுநாள் (சனிக்கிழமை) காற்றின் வேகம் மணிக்கு 49 கிலோ மீட்டராக இருந்ததால் அது குறைந்த காற்றழுத்தம் காற்றழுத்த மண்டலமாக மாறியது. ஞாயிற்றுக்கிழமை காற்றின் வேகம் 61 கிலோ மீட்டராக உயர்ந்ததால் தீவிர காற்றழுத்த மண்டலமாக உருவானது.

இந்த நிலையில் அந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அந்த புயலுக்கு ஹமூன் என்று பெயரிடப்பட்டது. வானிலை ஆய்வு மையம் கணித்த படி ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த காற்றழுத்த மண்டலம் புயலாக உருவெடுத்தது.

மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்தில் அதன் நகர்வு இருந்தது. வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி அந்த புயல் சின்னம் நகர்ந்தது. நேற்று முன்தினம் அதன் திசை வங்கதேசம் நோக்கி இருந்தது.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்த புயல் சின்னம் தீவிர புயலாக மாறியது. இதனால் வங்கக்கடல் பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசுகிறது. கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதையடுத்து வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஹமூன் புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று (புதன்கிழமை) வங்கதேசத்தில் கரையை கடக்கிறது. வங்கதேசம் டிங்கோனா தீவு – சந்திவிப் இடையே கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காளத்தில் மிக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புயலின் தாக்கத்தினால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *