தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 11ஆம் தேதி நிறைவடைந்தது. 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

பொதுவாக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தேர்வு முடிவுகள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாவது வழக்கம். தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி தொடர்பான யூகங்களால் மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்துக்கு உள்ளாவதை தடுக்கும் வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி விவரங்களை அரசு தேர்வுத்துறை அதிகாரபூர்வமாக முன்கூட்டியே வெளியிடும் நடைமுறையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதே நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்படுகிறது.

அந்த வகையில், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள் எப்போது என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத் துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பொதுத் தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண்களை தொகுக்கும் பணி நடைபெற்று வரும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Details about 10th and +2 results.