நியூயார்க் : தீபாவளி பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று ஐ.நா., சபை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவ. 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்தப் பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், சிறப்பு தபால் தலை வெளியிட ஐ.நா. சபை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐ.நா.வின் தபால் தலை நிர்வாகப் பிரிவு, தீபாவளி பண்டிகைக்காக அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது. ஐ.நா. தலைமை அலுவலகத்தில் அக். 19-ல் தீபாவளி சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்படும்.

ஒரு தாளில் 10 சிறப்பு தபால் தலைகள் இருக்கும். அதன் விலை 1.15 டாலர். அந்தச் சிறப்பு தபால் தலையில் அகல்விளக்கு ஒளிரும் படம் இடம்பெறும். அதன் பின்னணியில் ஐ.நா. தலைமை அலுவலக கட்டடமும் ‘மகிழ்ச்சியான தீபாவளி’ வாழ்த்தும் இடம்பெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை ஐ.நா.வுக்கு இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி துாதர் சயத் அக்பருதீன் வரவேற்று,’தீபாவளிக்கு ஐ.நா.வின் அருமையான பரிசு இது’ என்று அவர் ட்விட்டர் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 2016-ல் அக்டோபரில் அமெரிக்கா தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *