chesscom17216செஸ் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மாணவி ஒருவருக்கு பொறியியல் கல்லூரியில் இலவச சேர்க்கைக்கான அனுமதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் பகுதியை சேர்ந்த ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று முன் தினம் தமிழ்நாடு அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மாணவி பி.ஸ்வர்ணமாலாவுக்கு, ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் இலவச சேர்க்கைக்கான அனுமதி உத்தரவு வழங்கப்பட்டது.

தாகூர் கல்விக் குழும நிறுவனங்கள், தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக இந்த செஸ் போட்டி 10, 12, 14, 17 ஆகிய வயதுப் பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மீனம்பாக்கம் கேந்த்ரிய வித்யாலயா பள்ளி மாணவி பி.ஸ்வர்ணமாலாவுக்கு தாகூர் கல்விக் குழுமத் தலைவர் பேராசிரியர் எம்.மாலா, சிறப்புப் பரிசாக பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் இலவச சேர்க்கை வழங்குவதாக அறிவித்தார்.

சர்வதேச செஸ் போட்டி நடத்துனர் வி.காமேஸ்வரன் சேர்க்கைக்கான அனுமதி உத்தரவை மாணவி பி.சுவர்ணமாலாவுக்கு வழங்கினார். தாகூர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.சாந்தா, தாகூர் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் கே.சாந்தி, ஜெருசலேம் பொறியியல் கல்லூரி முதல்வர் ராமலிங்கம், உடற்கல்வி ஆசிரியர்கள் பி.நடராஜன், ரஜினிகாந்த், அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

English Summary: Free engineering Sheet for Chess Tournament winning student .