தமிழகத்தில் பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நோயின் தன்மையை 3 வகையாகப் பிரித்து அதற்கேற்ப சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகள்:

இன்ஃப்ளுயன்சா தொற்று அண்மைக்காலமாக வேகமாக பரவி வருகிறது. பருவ காலங்களில் அதன் பரவல் அதிகமாக காணப்படுகின்றது. குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அறிகுறிகள், நோயின் தீவிரத்தைப் பொறுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

அதன்படி, லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி உள்ளவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை. ஓசல்டாமிவிர் மருந்துகளும் அவர்களுக்கு அவசியமில்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது.

அதே வேளையில், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் தேவையின் அடிப்படையில் ஓசல்டாமிவிர் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையுடன் உட்கொள்ளலாம்.

மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, சளியில் ரத்தம் கலந்து வருதல், மயக்க நிலை உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் உள்ளவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிதல் அவசியம். அதே போன்று, மருத்துவத்துறையினர், கர்ப்பிணிகள், சுவாச நோய் பாதிப்புகள் உடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி முக்கியம். நோய் தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *