பி.எஸ்சி. ஹோட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேசிய அளவில் நடத்தப்படும் ஜே.இ.இ., நீட், நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதுபோல தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்ப கவுன்சிலின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பி.எஸ்சி. விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகப் படிப்புக்கான என்.சி.ஹெச்.எம். ஜே.இ.இ.-2019 தேர்வையும் என்டிஏ நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எப்போது?: இந்தத் தேர்வானது ஏப்ரல் 27-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி நாளாகும். தேர்வுக் கட்டணம் செலுத்த மார்ச் 16 கடைசி நாளாகும்.

இணையதள முகவரி: இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கும், விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கும் www.ntanchm.nic.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *