அறவழியில் உலகுக்கே எடுத்துக்காட்டாக ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் இளைஞர்களே, உங்களை நினைந்து நினைந்து மகிழ்கிறேன் என்று இசைஞானி இளையராஜா பாராட்டியுள்ளார். ஜல்லிக்கட்டுக்காக கடந்த 5 நாட்களாக கொட்டும் பனியிலும், கொளுத்தும் வெயிலிலும் தொடர்ந்து போராடி வருகிறார்கள் தமிழ் மாணவர்களும் இளைஞர்களும். இந்தப் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்து வருகின்றனர். திரையுலக, சமூக, அரசியல் பிரபலங்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். போராடும் இளைஞர்களுக்கு இசைஞானி இளையராஜா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: மாணவர்களே, இளைஞர்களே… இந்த உலகத்திற்கே வழிகாட்டும் வகையில் இந்த போராட்டத்தை நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு தலைவன் இல்லாமல், இவ்வளவு அமைதியான ஒரு கட்சியின் துணையில்லாமல் வேறு எந்த இயக்கங்களின் ஆதரவும் இல்லாமல், ஆதரவையும் நாடாமல், யாரும் வரக் கூடாது என்று தடை செய்துவிட்டு நீங்களாகவே நடத்துவது உங்களுக்கு இருக்கக் கூடிய தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. இந்தப் போராட்டத்தை, இந்த போராட்ட வழியை கண்டிப்பாக இந்த உலகம் பின்பற்றப் போகிறது. உலகத்திற்கே வழிகாட்டியாக நீங்கள் மாறிவிட்டீர்கள். இவ்வளவு உணர்ச்சியும் உத்வேகமும் உள் உணர்வும் உங்களுக்குள்ளே இத்தனை நாள் வரை பதுங்கிக் கிடந்தது, இப்போது வெளியே வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இது தொடரட்டும்… நீண்டு தொடரட்டும்.

English Summary :Isaingani Suport for Jallikattu Protest Youngsters