சென்னை: கேந்திரிய வித்யாலயா எனப்படும் கே.வி., பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 1ம் தேதி ‘ஆன்லைன்’ பதிவு துவங்குகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 1,199 கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில் தமிழகத்தில் 48 பள்ளிகள் உள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 14 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ‘ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு மார்ச் 1 காலை 8:00 மணிக்கு துவங்க உள்ளது. மார்ச் 19 மாலை, 4:00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்ப பரிசீலனைக்கு பின் தேர்வு செய்யப்படும் மாணவர் விபரம் மார்ச் 26ல் வெளியிடப்படும். இரண்டாவது பட்டியல் ஏப்., 9; மூன்றாவது பட்டியல் ஏப்., 23ல் வெளியாகும். ராணுவத்தினர் மத்திய பாதுகாப்பு படையினர் மத்திய அரசு பணியில் உள்ளவர்கள் மாநில அரசு பணியில் உள்ளவர்கள் தேசிய அளவில் மத்திய அரசின் விருது பெற்றவர்களின் பிள்ளைகள் மற்றும் கே.வி., பள்ளிகளின் முன்னாள் இந்நாள் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா, எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும், தலா, 10 பேரை சிபாரிசு செய்யலாம். அவர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இதற்கான விதிமுறைகளை, kvsangathan.nic.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *