சென்னை மெட்ரோ ரயில் பணிகளில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான பணிகள் முற்றிலும் முடிவடைந்து ஆய்வுக்குழுவின் சோதனையும் முடிந்துவிட்ட நிலையில் இந்த ரயிலை இயக்குவதற்கான தேதியை மே மாதம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல் கட்டமாக கோயம்பேடு- ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தனது குழுவுடன் இணைந்து இரண்டு கட்ட பாதுகாப்பு ஆய்வை முடித்துவிட்டார். இந்த ஆய்வு முற்றிலும் திருப்தி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த குழு மத்திய அரசுக்கு தன்னுடைய அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது. இதனையடுத்து மத்திய அரசும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான தேதியை அறிவிப்பதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன.

மெட்ரோ ரயில் இயங்கும் தேதியை அறிவிக்கும் முன்னர் மெட்ரோ ரயில் கட்டணம் குறித்து மாநில அரசுடன் இணைந்து விவாதிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மெட்ரோ ரயில்கட்டணம் குறித்த விவரங்கள் வெளியிட்ட பின்னரே மெட்ரோ ரயில் இயங்கும் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மெட்ரோ ரயில் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.10 என இருக்கும் எனவும், அதன்பின்னர் கிலோ மீட்டரை பொறுத்து கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்றும் கட்டண விபரங்கள் மே முதல் வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: When did the Metro Train opening Date should be announced?