tnpscகுரூப்-2-ஏ பணியிட தேர்வுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு வரும் திங்கட்கிழமை முதல் அதாவது அக்டோபர் 5 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி நேற்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

குரூப்-2-ஏ தேர்வில் அடங்கிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 29.6.2014 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளியிடப்பட்டன. இதற்காக நடத்தப்பட்ட கலந்தாய்வின் முடிவில் காலியாகவுள்ள 786 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு 2-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 5 முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் அடங்கிய தற்காலிக பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும், கலந்தாய்வு தேதி, நேரம் குறித்து சம்பந்தப்பட்ட விண் ணப்பதாரர்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், தரவரிசை, இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் காலியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். எனவே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணிநியமனம் வழங்கப்படும் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது. கலந்தாய்வுக்கு வராதவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English Summary:Monday onwards 2phase Counseling for Group2-A Workplaces.