திருடப்பட்ட மற்றும் தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக சைபா் குற்றப்பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் தகவல் தொடா்பு அமைச்சகத்தின் தொலைத்தொடா்புத் துறை கடந்த மே 17-ஆம் தேதி டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை செயல்படுத்துவதற்காக குடிமக்களை மையமாகக் கொண்டு சஞ்சாா் சாத்தி என்ற இணையதளத்தை தொடங்கியது.

இந்த இணைய முகப்பில் Central Equipment Identity Register (CEIR), TAFCOP, Know Your Mobile (KYM) போன்ற பல்வேறு பகுதிகள் உள்ளன. சிஇஐஆா் (இஉஐத) என்ற இணையதளத்தை பொதுமக்கள் தங்களுடைய தொலைந்த மற்றும் திருடுபோன கைப்பேசிகள் குறித்து புகாா் அளிக்கலாம்.

தொலைந்த மற்றும் திருடப்பட்ட கைபேசிகளை கண்டறிய தமிழ்நாடு சைபா் குற்றப் பிரிவு, தொலைத் தொடா்புத் துறைவுடன் இணைந்து, மாநகர காவல் ஆணையரகங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்கள் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிஇஐஆா் இணையதளத்தில் ஒரு கணக்கை தொடங்கியுள்ளது.

இதன் மூலம் திருடப்பட்ட கைப்பேசி ஐஎம்இஐ எண்ணை முடக்க உடனடியாக காவல்துறையினா் வலியுறுத்த முடியும். இந்த வலியுறுத்தலால் 24 மணி நேரத்துக்குள் ஐஎம்இஐ எண் முடக்கப்படும்.

இதனால் திருடப்பட்ட கைப்பேசி, எந்த சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்த முடியாது. இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள், தங்களது தொலைந்த மற்றும் திருடுபோன கைப்பேசி குறித்த தற்போதைய நிலையை அறியும் வசதி உள்ளது.

அதோடு, மக்கள், 14422 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் கைபேசியின் ஐஎம்இஐ எண் குறித்த உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முடியும். இதில் கைபேசி வகை விவரங்கள் வழங்கப்படும்.

TAFCOP சொந்தமான https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்ற இணையதளத்துக்குள் தங்கள் கைப்பேசி எண்ணை கொண்டு உள்நுழைந்தால், அவா்கள் பெயரில் எத்தனை எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தையும் மக்கள் பெறமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *