கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னக ரயில்வே புறநகர் ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் காகிதமற்ற பயணச் சீட்டு முறையைப் பயன்படுத்தும் வகையிலான செல்போன் ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆப்ஸை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் தங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து கொண்டு, ரயில்வே வாலட் மூலமாக பயணக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதன் பின்னர், பயணச் சீட்டு உறுதி செய்யப்பட்ட விவரம் செல்போனுக்கு தெரிவிக்கப்படும். பயணியின் செல்போனுக்கு அனுப்பப்படும் எஸ்.எம்.எஸை டிக்கெட் பரிசோதகரிடம் காண்பித்தாலே போதுமானது.

ஆனால் இந்த நடைமுறை ஒருசில ரயில் நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மீதியுள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் செல்போன் ஆப்ஸ் மூலம் டிக்கெட்டை பதிவு செய்தாலும், அந்தந்த ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் இயந்திரத்தில் இருந்து தங்கள் பயண டிக்கெட்டை பதிவிறக்கம் மூலம் பிரதியெடுத்து ரயில் பயணங்களின் போது கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இல்லையெனில் பயணிகள் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காகிதமில்லா பயணச் சீட்டு செல்லுபடியாகும் ரயில் நிலையங்கள்

சென்னை எழும்பூர் – சேத்துப்பட்டு – நுங்கம்பாக்கம் – கோடம்பாக்கம் – மாம்பலம் – சைதாப்பேட்டை – கிண்டி – பழவந்தாங்கல் – மீனம்பாக்கம் – திரிசூலம் – பல்லாவரம் – குரோம்பேட்டை – தாம்பரம் சானடோரியம் – தாம்பரம்

காகிதப் பயணச் சீட்டு தேவைப்படும் ரயில் நிலையங்கள்

சென்னை கடற்கரை – சென்னை கோட்டை – பூங்கா நகர் – பெருங்களத்தூர் – சேப்பாக்கம் – திருமயிலை – திருவான்மியூர் – வேளச்சேரி – சென்னை சென்ட்ரல் – பெரம்பூர் – அம்பத்தூர் – திருவள்ளூர் – திருவொற்றியூர் – மீஞ்சூர் – கும்மிடிப்பூண்டி

தென்னக ரயில்வேயின் இந்த குழப்பமான நடவடிக்கைகளால் ரயில் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

English Summary: Non Papered Train Ticket will be issued in Railway Stations gives confusion to Railway Passengers.