சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ், கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில், 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, 2015 – 16ஆம் ஆண்டில், அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமானது. அதற்கு அடுத்த கல்வியாண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில்,

கடந்த கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் அமலானது. இந்நிலையில் 2023 – 24ஆம் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், 2024 – 25ஆம் ஆண்டில், 10-ம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயமாகிறது.

இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குநர் நாகராஜ முருகன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், 2024 – 25ஆம் கல்வி ஆண்டில், 10-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாணவர்கள், பொது தேர்விலும், தமிழை ஒரு தேர்வாக எழுத வேண்டியது கட்டாயம் என்றும், இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் போன்றவை விரைவில் வடிவமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து தனியார் பள்ளிகளும், தகுதியான ஆசிரியர்களை பணி அமர்த்தி, மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கட்டாயம் கற்றுத் தர வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *