இமெயில், இண்டர்நெட் என அதிவேக தகவல் தொடர்புகள் பொதுமக்களின் வழக்கத்திற்கு வந்த பின்னர் அஞ்சல் நிலையங்களை பொதுமக்கள் உபயோகிப்பது குறைந்துவிட்டது. இதனால் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அஞ்சல் துறையும் வெறும் கடிதங்கள், மணியார்டர் போன்ற சேவைகளில் மட்டும் ஈடுபடாமல் புதுவிதமாக சிந்தித்து பல்வேறு புதிய சேவைகளையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பரிசோதனை அடிப்படையில் 522 அஞ்சல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அஞ்சல் நிலையங்களில் ஆன்லைன் ஷாப்பிங் திட்டம் சென்னை மண்டலத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி மண்டலத்தில் ரங்கம், கரூர், கோவை மண்டலத்தில் திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 8 கோட்டங்களில் உள்ள 522 அஞ்சலகங்கள் பரிசோதனை அடிப்படையில் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 299 அஞ்சலகங்களின் கம்ப்யூட்டர்களில் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான பிரத்யேக மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்டு, விற்பனையை தொடங்கியுள்ளது.

பொதுமக்கள் அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று தங்கம், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்பட தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாகவும், நேற்று முன்தினம் வரை சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் ரூ.1,25,894 மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து திருச்சி மண்டலத்தில் ரூ.67,448 மதிப்பிலான பொருட்களும் மதுரை மண்டலத்தில் ரூ.16,314- மதிப்பிலான பொருட்களும் கோவை மண்டலத்தில் ரூ.17,872 மதிப்பிலான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: மக்களிடம் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் அதிகரித்து வருகிறது. ஆனால், இணைய வசதி இல்லாததால் கிராம மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபட முடிவதில்லை. எனவே, கிராம மக்களுக்கு உதவும் வகையிலேயே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 522 அஞ்சலகங்களில் பரிசோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 337 அஞ்சலகங்களில் விற்பனை தொடங்கியுள்ளது. ஓரிரு தினங்களில் மற்ற இடங்களிலும் தொடங்கிவிடும்.

தனியார் நிறுவனங்களைப் போல நாங்களும் அவ்வப்போது பொருட்களுக்கு தள்ளுபடி அளிக்கிறோம். கடந்த 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஆன்லைனில் வாங்கும் தங்கத்துக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கினோம். இதனால், ஆன்லைனில் தங்கம் விற்பனை அதிகரித்து வருகிறது. வரும் வாரங்களில் வேறு பொருட்களுக்கும் இதுபோன்ற தள்ளுபடி கிடைக்கும்.

பொருட்களை வாங்க விரும்புவோர் அஞ்சலகத்துக்குச் சென்று, ஆன்லைனில் தேவையானவற்றை தேர்வு செய்ய வேண்டும். அதன் விலை உள்ளிட்ட விவரங்கள் வாடிக்கையாளரின் செல்போனுக்கு குறுந்தகவலாக வரும். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் சம்பந்தப்பட்ட அஞ்சலகத்துக்குச் சென்று, பணத்தை செலுத்தி பொருளை பெற்றுக் கொள்ளலாம். நேரில் வர முடியவில்லை என்றால், அஞ்சல் ஊழியர்களே வீடு தேடி வந்து விநியோகிப்பர். பொருள் பிடிக்கவில்லை என்றால், உடனே திருப்பிக் கொடுத்து விடலாம்.

மேலும், தங்களது கிராமத்தில் உள்ள அஞ்சலகத்திலிருந்து ஆன் லைன் ஷாப்பிங் மூலம் பரிசுப் பொருளை தேர்வு செய்து, வேறு கிராமத்தில் உள்ள உறவினர்களுக்கும் அனுப்பி வைக்க முடியும். அடுத்த ஆண்டுக்குள் அனைத்து அஞ்சலகங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றனர்.

English Summary : Post office now started online shopping in 522 post office in Tamil Nadu.