தீபாவளி முடிந்து லட்சக்கணக்கானோர் நேற்று சொந்த ஊர் திரும்பினர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னையை நோக்கி வந்ததால் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி, பணி, கல்வி நிமித்தமாக வெளியூரில் தங்கியிருப்போர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர். அவர்களுக்காக சிறப்பு, பேருந்துகள், ரயில்கள் போன்றவை இயக்கப்பட்டன. குறிப்பாக அரசு பேருந்துகளில் சென்னையில் இருந்து மட்டும் 5.66 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்திருந்தனர்.

இவ்வாறு சென்றவர்கள் ஊர் திரும்ப நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதே நேரம், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களுக்குச் சென்றிருந்தவர்கள் மற்றும் சொந்த வாகனங்களில் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் நேற்று பிற்பகல் முதலே சென்னை திரும்ப தொடங்கினர்.

இதனால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்தன. மேலும், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளிலும் ஆயிரக்கணக்கானோர் வந்தனர்.

செங்கல்பட்டு, தாம்பரம் பெருங்களத்தூர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள சாலைகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் செங்கல்பட்டு, தாம்பரம் காவல் துறை சார்பில் போக்குவரத்து சீர் செய்யும் பணிகளில் காவலர்கள் ஈடுபட்டனர்.

குறிப்பாக செங்கல்பட்டு காவல்துறை சார்பில் தொழுப்பேடு, பரனூர் சுங்கச்சாவடியில் தலா ஓர் ஆய்வாளர் தலைமையில் 20 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் இருசக்கர வாகனம், ஆட்டோவுக்கு தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கிய சாலைகளில் போலீஸார் பணியில் இருந்தனர்.

மேலும் வாகனங்கள் பழுது அடைந்தால் அவற்றை அப்புறப்படுத்த 6 மீட்பு வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. இதேபோல் தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸார் பணியில் இருந்தனர். ஜிஎஸ்டி சாலையில் பல்வேறு இடங்களில் சாலை திருப்பங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

ரயில் நிலையங்களில்… ரயில் நிலையங்களும் நேற்று அதிகாலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. தமிழகத்தில் தென், மத்திய, மேற்கு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட வழக்கமான ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பயணிகளின் வசதிக்காக, தூத்துக்குடி, நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து தாம்பரம், சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இதன் காரணமாக, தாம்பரம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் நேற்று அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. ரயில் நிலையங்களுக்கு வெளியே சாலையோரம் ஆட்டோ மற்றும் இதர வாகனங்கள் சவாரிக்காக நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே ஊர் திரும்புவோர் வசதிக்காக இன்றும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் போன்றவை இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *