பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிந்தது. தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகின்றன.
தமிழகத்தில், பிளஸ் 1 பொது தேர்வு, மார்ச், 7ல் துவங்கியது. இந்தாண்டு முதன்முதலாக, பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், மாணவர்கள் மத்தியில், தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அத்துடன், இந்த ஆண்டு தேர்வில், பெரும்பாலான பாடங்களில், வினாத்தாள்கள் கடினமாகவே இருந்தன. குறிப்பாக, தமிழ் இரண்டாம் தாள், இயற்பியல் தேர்வுகள் தவிர, அனைத்து பாடங்களிலும், மாணவர்கள் முழுவதுமாக விடை எழுத தடுமாறினர். கணிதம், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில், ‘நீட்’ மற்றும், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு கேட்கப்படுவது போன்ற, வினாக்கள் அமைந்துஇருந்தன. இந்த பாடங்களில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை, மிக சொற்பமாகவே இருக்கும் என, ஆசிரியர்கள் தெரிவித்துஉள்ளனர். இந்நிலையில், பிளஸ் 1 தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. முக்கிய பாடப் பிரிவு மாணவர்களுக்கு, ஏப்., 9ல், தேர்வுகள் முடிந்தன. மற்ற தொழிற்கல்வி மாணவர்களுக்கு, நேற்று தேர்வுகள் முடிந்தன. தேர்வின் முடிவுகள், மே, 30ல் வெளியாகின்றன.

English Summary: Plus 1 Exam Completed. Result will be Published on 30th May.