தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பொழிந்து வரும் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு இருந்து வருகிறது. இன்று காலை வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று (18.12.2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *