புதுதில்லி: சமையல் எரிவாயுவின் விலை இன்று முதல் சிலிண்டருக்கு ரூ.2.89 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது.

இதேபோல் அவ்வப்போது சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை தில்லியில் ரூ.59 உயர்த்தப்பட்டு உள்ளது. மானியம் உள்ள சமையல் எரிவாயு உருளை ஒன்றின் விலை ரூ.2.89 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து மானிய விலை சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.502.4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று திங்கள்கிழமை (அக்.1) முதல் அமலுக்கு வருகிறது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால், மானியம் பெறும் பயனாளிகளுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை ரூ.376.60 பைசாவாக உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம் செப்டம்பர் வரை இந்த மானியத்தொகை ரூ.320.49 பைசாவாக இருந்தது.

மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரில், நீர்ம பெட்ரோலியத்தோடு, 20 சதவீதம் மெத்தனால் கலந்து விநியோகிக்க, மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனால் சிலிண்டர் விலை ரூ.100 வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *