ரயில் சேவை நீட்டிப்பு, புதிய ரயில்கள் இயக்குதல், குறிப்பிட்ட ஊரில் நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, ரயில்வே வாரியம் அவ்வப்போது ஒப்புதல் அளித்து வருகிறது.

அந்த வகையில், வேளாங்கண்ணி – எர்ணாகுளம், திருப்பதி – கொல்லம் இடையே புதிய ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில், வேளாங்கண்ணி – எர்ணாகுளம் ரயில்கள் வாரம் 2 முறை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். இந்த ரயில் செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை சென்றடையும்.

இதுபோல, திருப்பதி – கொல்லம் இடையே வாரம் 2 முறை இரு மார்க்கத்திலும் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கொல்லம் வரை இயக்கப்படும்.

இதேபோல, மயிலாடுதுறை – திருச்சி, திருச்சி – கரூர், சேலம் – கரூர் வழித்தடங்களில் தனித்தனியாக இயக்கப்பட்ட ரயில்களை ஒன்றாக இணைத்து, மயிலாடுதுறை – சேலம் வரை விரைவு ரயிலாக இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாலக்காடு – திருநெல்வேலி வரை இயக்கப்படும் பாலருவி விரைவு ரயில் சேவையை தூத்துக்குடி வரை நீட்டிக்கவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *