சென்னை: வரும் கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்புக்கு முப்பருவ பாட திட்டம் நீக்கப்படுகிறது. தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாட திட்டம் 2011ல் அமலுக்கு வந்தது. அப்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ பாட திட்டம் மற்றும் தொடர் செயல்முறை திறன் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்படி காலாண்டு வரையில், முதல் பருவம்; அரையாண்டில் இரண்டாம் பருவம் மற்றும் ஆண்டு இறுதியில் மூன்றாம் பருவத்துக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் ஒரு பருவத்துக்கான தேர்வை எழுதிய பின் அந்த பாட புத்தகங்களை மீண்டும் மாணவர்கள் படிக்க வேண்டியதில்லை. அடுத்த பருவத்துக்கான பாடங்களை மட்டும் படித்து தேர்வு எழுதினால் போதும்.

இந்த முப்பருவ முறையில் ஒன்பதாம் வகுப்பு வரை படிப்போருக்கு 10ம் வகுப்பில் ஆண்டு முழுவதுக்குமான பாடங்களுக்கு பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவும் அரசு பள்ளி மாணவர்கள், தேர்ச்சி பெறவும் திணறும் நிலை உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்து, ஒன்பதாம் வகுப்புக்கான முப்பருவ பாட முறையை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது. இதன்படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூன்று பருவ புத்தகங்களுக்கு பதில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆண்டு முழுவதற்குமான ஒரே புத்தகத்தை தயார் செய்துள்ளது.

எனவே வரும் கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்புக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு புத்தகம் மட்டுமே வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *