தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு சேர்க்கைக்காக விண்ணப்பிக்க டிசம்பர் 10 கடைசி நாளாகும்.

இது தொடர்பான தமிழக அரசின் செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்பு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து, நூலாக்கம் செய்யும் வகையில் இந்த பட்டயப் படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்தப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஓராண்டுக்கு 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.3,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ulakaththamizh.org என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க டிசம்பர் 10 கடைசி நாளாகும்.

கல்வித் தகுதி: இந்தப் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு எதுவும் கிடையாது. பயிற்சிக்கான கட்டணமாக ரூ.2,000 வசூலிக்கப்படும். வகுப்புகள் 2019 ஜனவரி 2 ஆம் தேதி முதல் தொடங்கும்.

எழுத்துத் தேர்வு: இந்தப் படிப்புக்கான எழுத்துத் தேர்வு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு “இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத்தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-113′ என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்: 044-22542992, 22540087.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *