தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அஞ்சல்வழி சேவையில் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து இக்கல்வியாண்டில் வைணவப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளதாக என்று அப்பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழி கல்வி இயக்குநர் என்.பாஸ்கரன் தெரிவித்தார்.

அரக்கோணம் விவேகானந்தா கல்வியியல் கல்லூரியின் 10-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய பின் தினமணி செய்தியாளரிடம் என்.பாஸ்கரன் கூறியதாவது: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழி படிப்புகள் பிரிவில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில் நிர்வாகத்துடன் இணைந்து வைணவ சமயத்தைப் பற்றிய முதுகலை, இளங்கலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக அனுமதி கோரி யூஜிசியிடம் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி பெறப்படும். இந்தப் படிப்புகளுக்கான வாராந்திர வகுப்புகள் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே வைணவ அறிஞர்களால் நடத்தப்படும். இதில், அனைத்து படிப்புகளையும் சேர்த்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

முன்னதாக விழாவுக்கு விவேகானந்தா வித்யாலயா கல்விக் குழுமத் தலைவர் ஏ.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கல்விநிலைய ஆலோசகர் பி.கண்ணன் வரவேற்றார். இதில் கல்விக் குழுமச் செயலர் எஸ்.செந்தில்குமார், கல்லூரி முதல்வர் கே.வெங்கடேசன், திருவண்ணாமலை, மல்லவாடி விஜய் கல்வியியல் கல்லூரித் தாளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *