சென்னை வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை ஜூலை மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்து சேவையை அதிகரிக்கும் நோக்கிலும் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தெற்கு ரயில்வேயுடன் இணைந்து, முதல் கட்டமாக சென்னை கடற்கரை – மயிலாப்பூர் இடையேயும், இரண்டாவது கட்டமாக மயிலாப்பூர் – வேளச்சேரி இடையேயும் பணிகள் முடிக்கப்பட்டு, இந்த வழித்தடத்தில் தினமும் 150 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதை த்தொடர்ந்து 3-வது கட்டமாக, வேளச்சேரி – பரங்கிமலை திட்டப்பணி ரூ.495 கோடியில் கடந்த 2008-ம் ஆண்டுதொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 5 கி.மீ. தொலைவில், 4.5 கி.மீ.க்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டன. இந்நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் பல ஆண்டுகளாக பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இப்பிரச்சினைக்கு 2 ஆண்டுக்கு முன்பு தீர்வு காணப்பட்டதால், கடந்த சில மாதங்களாக இந்த வழித்தடத்தில் பணிகள் மீண்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாலத்தை தாங்கும் தூண்கள் அமைத்து, அதன் மீது கர்டர்கள் (தாங்கு பாலம்) பொருத்தும் பணி நடைபெறுகிறது.

தற்போது, பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 500 மீட்டர் தொலைவில் 250 மீட்டர் வரை பணிகள் முடிந்துவிட்டன. மொத்தம் 36 கர்டர்களில் 18 கர்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகள் வரும் ஜூலைக்குள் முடிக்கஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பின்னர், ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்று, ரயில் சேவை தொடங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *