சென்னை கடற்கரை-அரக்கோணம்-திருமால்பூர் இடையே சுற்றுவட்ட ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

உள்ளூர் ரயில் சேவையை விரிவாக்கும் நோக்கில், சென்னை கடற்கரை-அரக்கோணம்-திருமால்பூர் இடையே சுற்றுவட்ட ரயில்களை (புறப்பட்ட இடத்திற்கே வந்தடையும் ரயில்) அறிமுகப்படுத்த தெற்கு ரயில்வே பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, சுற்றுவட்ட ரயில்களை அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை திருமால்பூர் இடையே இயக்கப்படும் ரயில்கள் அரக்கோணம் வரை விரிவுபடுத்தப்படும். இதுபோல, அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்கள் திருமால்பூர்வரை விரிவுபடுத்தப்படும்.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது: சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரயில் அதே இடத்துக்கு வந்து சேரும் வகையில், சுற்றுவட்ட ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயில் புறப்பட்டு திருமால்பூர் வழியாக தக்கோலம், அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரை வந்தடையும். இதுபோல, சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு அரக்கோணம், தக்கோலம், திருமால்பூர் வழியாக சென்னை கடற்கரை வந்தடையும். தக்கோலம்-அரக்கோணம் இடையே மாற்றுபாதை அமைக்கும் பணி முடிந்துவிட்டது. விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *