paravai‘தூள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏ சிங்கம் போல நடந்து வர்றான் செல்ல பேராண்டி’ என்ற பாடலின் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர் பிரபல கிராமிய பாடகி மற்றும் நடிகை பரவை முனியம்மா. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தனது மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் வறுமையில் வாடுவதாக பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டிக்கு அளித்தார்.

அந்த பேட்டி வெளியான சிலமணி நேரங்களில் நடிகர் விஷால் பரவை முனியம்மாவிடம் தொடர்பு கொண்டு அவருடைய மருத்துவ செலவிற்கு தேவையான உதவிகளை செய்வதாக வாக்களித்ததோடு அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

அதேபோல் நடிகர் சங்கத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் மருத்துவ செலவுக்கு தருவதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்தார். மேலும் நடிகர் தனுஷ் ரூ.5 லட்சம் தருவதாக அறிவித்தார். மற்றொரு பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் மதுரைக்கு நேரில் சென்று பரவை முனியம்மாவின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்து அவரும் பண உதவி செய்தார்.

இந்நிலையில் பரவை முனியம்மாவுக்கு முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ரூ.6 லட்சம் நிதியுதவியும், குடும்ப செலவுகளுக்கென்று மாதந்தோறும் ரூ. 6 ஆயிரமும் ‘‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை’’யில் இருந்து வழங்க ஆணையிட்டுள்ளார்.

மேலும், மதுரை, தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் பரவை முனியம்மாவின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதியுதவியை ‘‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை’’யே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.

English Summary:The Chief Minister Jayalalithaa help to paravai muniyamma