ஆவடி நகராட்சியில் மத்திய அரசு நிதி உதவியுடன் ரூ.3.16 கோடியில் 5 பூங்காக்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

ஆவடி நகராட்சி பகுதிகளில் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன், அம்ரூத் திட்டம் சார்பில் உருவான 5 பூங்காக்கள் திறப்பு விழா மற்றும் குப்பைகளை அகற்றும் இலகுரக வாகனங்களை தொடங்கி வைக்கும் விழா ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பூங்காக்களை திறந்து வைத்துப் பேசியது: ஆவடி பெருநகராட்சியில் அம்ரூத் திட்டம் சார்பில் 5 பூங்காக்களை மேம்படுத்தும் பணிக்காக ரூ.3.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இப்பூங்காக்களில், நடை பயிற்சி பாதை வசதி, குழந்தைகளுக்கான சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல்கள் மற்றும் பல விளையாட்டு உபகரணங்கள், இளைப்பாரும் இருக்கைகள், மின் விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பூங்காக்கள், ஆவடி நகராட்சி அந்தோணி நகர் வார்டு எண்: 13-இல் ரூ.60 லட்சத்திலும், வீட்டு வசதி வாரியம் வார்டு எண்: 18-இல் ரூ. 63 லட்சத்திலும், பருத்திப்பட்டு லாசர் நகர் வார்டு எண்: 27-இல் ரூ. 44 லட்சத்திலும், பாலாஜி நகர் வார்டு எண்: 36-இல் ரூ. 59 லட்சத்திலும்,

ஸ்ரீராம் நகர் வார்டு எண்: 16-இல் ரூ. 90 லட்சத்திலும் பணிகள் முடிந்த நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றார். அதைத் தொடர்ந்து, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் குப்பை அள்ளும் பணிக்காக ரூ.1.51 கோடியில் 27 இலகுரக வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.அலெக்சாண்டர், ஆவடி நகராட்சி ஆணையர். மு.ஜோதிகுமார், நகராட்சி பொறியாளர் க.வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *