சென்னை: ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை தேர்தலுக்கு பின் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. ‘தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வு நடத்தப்படும்’ என தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது.

ஆசிரியர் தகுதி தேர்வான ‘டெட்’டில், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுத முடியும். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பின்னடைவு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப டி.ஆர்.பி., இரு வாரங்களுக்கு முன் அறிவிக்கை வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் பணியில் 148 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இவற்றில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு மட்டும், போட்டி தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால் லோக்சபா தேர்தல் நெருங்கி விட்டதால் தற்போதைய நிலையில் போட்டி தேர்வை நடத்த வேண்டாம் என டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.

தேர்தல் முடிந்த பின் ஜூன், ஜூலையில் போட்டி தேர்வை நடத்தலாம் என பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளும் ஆலோசனை வழங்கி உள்ளனர். அதேபோல கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கையும் தள்ளி போகும் என பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *