தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சனிக்கிழமை வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமை வறண்ட வானிலை காணப்படும். மேலும், உள் தமிழகத்தின் சில இடங்களில் சனிக்கிழமை வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் தெளிவாக இருக்கும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. தென் தமிழக கடலோரத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. அதிகபட்சமாக திருத்தணியில் 101 டிகிரி வெப்பநிலை பதிவானது. தருமபுரி, சேலத்தில் தலா 100 டிகிரியும், மதுரை விமானநிலையம், வேலூரில் தலா 98 டிகிரியும் வெப்பம் பதிவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *