சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகத்தில் வரும் 26-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த உள்ளன.

அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முடித்த 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.

இந்த முகாமில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் அதிகமான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளன. மேலும் துபையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *