திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி, பாதுகாப்புப் பணிகளுக்காக 3000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பதி கோயில் பிரம் மோற்சவ விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப் பட்டுவிட்டன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, போக்குவரத்து வசதி கள் செய்யப்பட்டுள்ளன. 13-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை இந்த பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஏழுமலை யானுக்கு பட்டு வஸ்திரங்களை 13-ம் தேதி காணிக்கையாக வழங் குகிறார். விழாவின் முக்கிய நாளான 17-ம் தேதி கருட சேவையும், 18-ம் தேதி மாலையில் தங்க ரத ஊர்வலமும், 20-ம் தேதி காலை தேர்த் திருவிழாவும், 21-ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இந்த விழாவுக்காக 3000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். கருட சேவையின் போது, கூடுதலாக 1,500 போலீ ஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடு படுத்தப்படுகிறார்கள். திருமலை யில் பல்வேறு இடங்களில் 650 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பிரம்மோற்சவத்தில் சாமானிய பக்தர்களுக்கே அதிக முன்னுரிமை வழங்கப்படும். இதன் காரணமாக, வரும் 21-ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஆர்ஜித சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப் பட்டுள்ளது.

மேலும், பிரம்மோற்சவ விழா வினைக் காண வசதியாக 31 இடங் களில் எல்.இ.டி. தொலைக் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. மேலும், 11 முதலுதவி மையங்கள், 12 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரம் மோற்சவ விழா நடைபெறும் இந்த 9 நாட்களும் அலிபிரி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

கருட சேவை நாளில் ரூ.300 மற்றும் சிறப்பு சர்வ தரிசன டோக்கன்கள் வழக்கப்பட மாட்டாது. இதேபோல் 16, 17 ஆகிய 2 நாட்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்களின் விநியோகமும் நிறுத்தப்படும். கருட சேவையன்று திருப்பதியில் இருந்து திரு மலைக்கு இரு சக்கர வாகனங்கள் போக்குவரத்து அனுமதிக்கப்பட மாட்டாது என அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *