vishal-won-01தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டது.

3139 வாக்காளர்கள் கொண்ட இந்த தேர்தலில் 2607 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதில் நேரடியாக 1824 வாக்குகளும், தபால் மூலம் 783 வாக்குகளும் பதிவானது. முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களும், நடிகைகளும் மிகவும் ஆர்வமாக வாக்களித்தனர். அஜீத், நயன்தாரா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் வாக்களிக்கவில்லை.

பதிவான அனைத்து வாக்குகளும் மாலை 6 மணியளவில் என்னும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து நேரடியான செலுத்திய வாக்குகளை எண்ணினர். பரபரப்பாக நடந்த இந்த வாக்கு எண்ணிக்கையில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி அனைத்து முக்கிய பதவிகளையும் கைப்பற்றியது.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் 1231 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்ட்யிட்ட விஷால் 1,445 வாக்குகள் பெற்றார். ராதாரவிக்கு 1,138 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. 307 வாக்குகள் வித்தியாசத்தில் விஷால் வெற்றி

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி 1,493 வாக்குகள் பெற்று 413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர்.கண்ணனுக்கு 1,080 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்ட கருணாஸ் 1,362 வாக்குகளும், பொன்வண்ணனுக்கு 1,235 வாக்குகளும் பெற்றனர். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் அணியின் சிம்பு 1,107 வாக்குகளும், விஜயகுமார் 1,115 வாக்குகளும் பெற்றனர்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் நாசர் கூறியதாவது: இந்த தேர்தல் யாரையும் தோற்கடிக்க வேண்டும் என்று நிகழ்ந்த நிகழ்வு அல்ல. ஒரு மாற்றம் வர வேண்டும் என்று நினைத்தோம். அது நடந்துள்ளது. சரத்குமார் எனக்கு வாழ்த்து தெரிவித்து முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார். எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக இணைந்து செயல்படுவோம். தேர்தல் சிறப்பாக நடத்த உதவியக் முதல்வர், காவல்துறை, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி’ என்று கூறினார்.

இந்த தேர்தல் வெற்றி குறித்து விஷால் கூறியதாவது: ” நாசரின் 18 ஆண்டுகால கனவு நிறைவேறியிருக்கின்றது. தேர்தலை சிறப்பாக நடத்த உதவிய முதல்வர் ஜெயலலிதா, போலீசார் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி.

தோல்வி அடைந்த சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ நாசர் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தேர்தலுக்கு முன்பிருந்த காழ்ப்புணர்ச்சியை மறந்துவிட்டு, நடிகர் சங்கம் ஒற்றுமையாக செயல்படவேண்டும். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ஏன் சிறந்தது என்பது பற்றி விளக்கி கூறுவேன். தேவைப்பட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் உதவி செய்வேன். இதை எனது தோல்வியாக கருதவில்லை, எதிர் அணியின் வெற்றியாக பார்க்கிறேன். நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்” என்று கூறினார்

இந்த தேர்தலின் முடிவை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் என்று நடிகர் ராதாரவி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று அல்லது நாளை பதவியேற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English summary – Vishal team wins the Nadigar sangam Elections, Nasser elected as new President